Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை அழகர்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான நேற்று சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இரண்டாம் நாளான (ஏப்ரல் 28) இன்று மாலையிலும், மூன்றாம் நாளான (ஏப்ரல் 29) நாளை காலையிலும் திருக்கல்யாண
மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
அன்று மாலை கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின், கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 காலை 5.30 மணியளவில் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும்.
வழிநெடுகிலும் மண்டகப் படிகளில் எழுந்தருளி, அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்கிறார்.
இரவு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைசூடி அருள்பாலிக்கிறார்.
மே1-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கருப்பண்ணசாமி கோயில் முன்பு ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.
அதைத் தொடர்ந்து, அதிகாலை 5.35-க்கு மேல் 5.55 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.
அப்போது, வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வர்.
பின்னர் ராமராயர் மண்டபம் செல்கிறார். அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.
மே 2-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.
அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். மே 3-ல் மோகினி அவதாரத்தில் பத்தி உலாவுதல் நடைபெறும்.
பின்னர் அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
மே 4-ம் தேதி மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளியபின், அழகர்மலைக்கு திரும்புகிறார்.
மே 5-ம் தேதி கோயிலை சென்றடைகிறார்.
மே 6-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b