Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர் , 28 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா அருகே உள்ள சினேகபுரி பகுதியில் குடும்ப தகராறும், கள்ளக்காதல் பிரச்சினையும் காரணமாக டிரைவரும், அவரது கள்ளக்காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினேகபுரி பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (30) டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி அஞ்சனா (26). அஞ்சனாவின் தோழியான மில்னா (24), திருச்சூர் வென்னூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகள். பாபு பேக்கரி நடத்தி வருகிறார்.
மில்னா அடிக்கடி அஞ்சனா வீட்டிற்கு சென்று வந்ததால், அவருக்கும் ஸ்ரீஜித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் தெரியவந்ததும், அஞ்சனா இருவரையும் கண்டித்ததுடன் அடிக்கடி தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தற்கொலை முயற்சி
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின் போது, அஞ்சனாவை ஸ்ரீஜித் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஞ்சனா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில், மில்னாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தும், ஸ்ரீஜித்துடன் இருந்த உறவை அவர் தொடர்ந்தார்.
கடந்த 24-ந்தேதி பேக்கரியில் இருந்து வெளியேறிய மில்னா வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு மாளா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மில்னாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் ஸ்ரீஜித் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
உடனே அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது ஸ்ரீஜித் மற்றும் மில்னா இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “குடும்ப பிரச்சினைகள் மற்றும் தற்கொலை முயற்சி சம்பவம் எங்களை மனதளவில் பாதித்தது.
இனி வாழ விருப்பமில்லை; அதனால் ஒன்றாக உயிரிழக்க முடிவு செய்தோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA