தாயை பிரிந்த குட்டி யானை ,ஏற்க மறுத்த யானைக் கூட்டம் – தீவிர கண்காணிப்பில் வனத்துறை
கோவை, 28 ஏப்ரல் (ஹி.ச.) கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை–லிங்காபுரம் வனப்பகுதியில், தாயை பிரிந்து தவித்துக் கொண்டிருக்கும் குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை
யானை


கோவை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை–லிங்காபுரம் வனப்பகுதியில், தாயை பிரிந்து தவித்துக் கொண்டிருக்கும் குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, கடந்த 25ஆம் தேதி வனப்பகுதி சாலையோரத்தில் தனியாக சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டி யானையை அதன் தாய் யானையுடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகிலுள்ள வனப்பகுதிகளில் யானைக் கூட்டங்கள் உள்ளனவா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இதனையடுத்து, தாயை பிரிந்து பரிதவித்துக் கொண்டிருந்த குட்டி யானையை, ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

காட்டுக்குள் யானைக் கூட்டத்தை கண்ட குட்டி யானை அவற்றுடன் சேர முயன்றது.

ஆனால், அந்த யானைக் கூட்டம் குட்டி யானையை ஏற்க மறுத்ததோடு, அதனை விரட்டியடித்தது. இந்த சம்பவம் வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, குட்டி யானை பாதுகாப்பாக உள்ளதா என்பதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அதை மற்றொரு யானைக் கூட்டத்துடன் அல்லது அதன் தாய் யானையுடன் மீண்டும் சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P