Enter your Email Address to subscribe to our newsletters

கேங்டாக், 28 ஏப்ரல் (ஹி.ச.)
சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு புறக்கணித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு நிறைவு விழா கேங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பிரதமர், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
தொடர்ந்து ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
“சிக்கிம் ‘கிழக்கின் சொர்க்கம்’ என்றும், ‘ஆர்க்கிட் மலர்களின் தோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு காணப்படும் இயற்கை அழகு, அமைதி மற்றும் மக்களின் வாழ்க்கை முறை தனித்துவமானது.
மாநிலம் முழுவதும் பண்டிகை சூழல் நிலவுவது மகிழ்ச்சியளிக்கிறது.
சிக்கிம் மக்கள் ‘ஒரே இந்தியா’ என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் தேசப்பற்று நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
அரசியல் சுயநலத்திற்காக சாதி, மத பாகுபாடுகளை உருவாக்க முயற்சிகள் நடைபெறும் நிலையில், சிக்கிம் மக்கள் ஒற்றுமையை நிலைநிறுத்தி வருகின்றனர்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தை இந்த மாநிலம் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.
மாநில வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது.
இன்று பாஜக அரசு செய்து வரும் பணிகளை முன்பே மேற்கொள்ள முடிந்திருந்தாலும், காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை.
சிவோக்-ரங்போ ரெயில் பாதை திட்டம் 2008-09ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் பெற்றது. ஆனால் நீண்ட காலமாக எந்த முன்னேற்றமும் இல்லை.
மத்தியில்பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகே சிக்கிமில் வளர்ச்சி பணிகள் வேகமடைந்தன.
தற்போது முதல்முறையாக சிக்கிம் மாநிலத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA