Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் அடுத்தவாரம் தொடங்கும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக, வேலூரில் 106 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் தலா 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையம், திருச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் 104 டிகிரியையும் தாண்டியது. மதுரை நகர், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, சேலம், கோவை, பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி தகித்தது.
கடும் கோடை வெயிலால் நெல்லை போன்ற இடங்களில் இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் சென்னையில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதனிடையே, வரும் 30ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வரும் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P