மழையின்றி வாடும் பயிர்கள் - தாளவாடி விவசாயியின் வேதனை
ஈரோடு, 29 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் நீடிக்கும் வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் நீர்வளங்கள் வற்றியுள்ள நிலையில், பயிர்கள் வாடி வருவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்
H


ஈரோடு, 29 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் நீடிக்கும் வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போதிய மழை இல்லாததால் நீர்வளங்கள் வற்றியுள்ள நிலையில், பயிர்கள் வாடி வருவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தாளவாடி மலைப்பகுதியில் விவசாயமே மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது.

இப்பகுதியில் பருவமழையை நம்பி மானாவாரி மற்றும் நீராவாரி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தற்போது கோடை வெயில் தீவிரமடைந்து மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்தாலும், அது விவசாயத்திற்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாளவாடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், “20 மணி நேரம் காத்திருந்தும் இந்த சிறிய குட்டையில் இவ்வளவு தண்ணீர்தான் கிடைத்துள்ளது.

இதை வைத்து எப்படி விவசாயம் செய்வது? என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும், முட்டைக்கோஸ் மற்றும் பீட்ரூட் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, விவசாயிகளின் துயர நிலையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam