Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 29 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர் மற்றும் பாஜக மீது முதல்வர் மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஆனால் மாநிலத்தைப் பற்றி தெரியாத அதிகாரிகள் பலர் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரு அதிகாரி மாநிலம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
திரிணமூல் காங்கிரஸ் முகவர்களை கைது செய்ய போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எங்கள் கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இன்று காலை எங்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். வாக்குப்பதிவு என்பது ஜனநாயக திருவிழா.
ஆனால் அதை சீரழிக்க முயற்சி நடைபெறுகிறது. தேர்தலை முறைகேடாக நடத்துவது பாஜகவின் நோக்கம் என்றார்.
மம்தாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில்,
மம்தா பானர்ஜி ரவுடி கும்பலினருடன் சுற்றித்திரிந்து வாக்காளர்களை அச்சுறுத்துகிறார்.
பவானிபூர் தொகுதியில் இந்து வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதனால் மேற்கு வங்க தேர்தல் அரசியல் குற்றச்சாட்டு-பதிலடி மூலம் மேலும் சூடுபிடித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA