Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கும் விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இதே குற்றத்தில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும் நிலையில், சில விற்பனையாளர்கள் அதிக லாபத்திற்காக செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, மொத்த மற்றும் சில்லரை மாம்பழக் கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாம்பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளனவா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வின் போது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால் கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ