Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
வடக்கு தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
அதேநேரம் ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் (ஏப்ரல் 28) கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளுமையான சூழல். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே, திடீரென வானிலை மாறி, தேவகோட்டை நகர், காரைக்குடி ரோடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
மாதக்கணக்கில் வாட்டி வதைத்த வெயிலுக்குப் பின், சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P