மண்ணடி தேரோட்டம் விபத்து - சக்கரத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை மண்ணடியில் உள்ள மல்லிகேஸ்வர் கோயிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்
Sil


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை மண்ணடியில் உள்ள மல்லிகேஸ்வர் கோயிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணடி புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (24), தேரோட்டத்தின் போது தேரின் சக்கரத்திற்கு தடுப்புக் கட்டை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பக்தர்கள் திரளாகக் கூடியிருந்த சூழலில் தேரை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் காலில் வழுக்கி தேரின் மிகப்பெரிய சக்கரத்தின் கீழ் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் கடுமையான உடல் காயங்கள் ஏற்பட்ட குபேந்திரனை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தபோதிலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல நாட்கள் உயிர்ப்போராட்டம் நடத்திய குபேந்திரன், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் மட்டுமல்லாமல், மண்ணடி பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ