Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த த.வெ.க. வேட்பாளர் ரேவதி மீது அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததுடன், அதில் குழந்தைகளையும் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31.03.2026 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில், வேட்பாளர் ரேவதி ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாத்தனூர் குடிகாடு கிராமத்தில், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மேந்திரன் தலைமையில் சுமார் 25 பேர், அதில் 7 குழந்தைகள் உட்பட, அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பிரச்சார நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது என்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் குமார், 02.04.2026 அன்று மருவத்தூர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN