Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சினோரா அசோக் தன்னையும், தனது குடும்பத்தினரையும் பாதுகாக்க போதுமான காவல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சினோரா அசோக் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான சேகர்பாபு தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தேர்தல் சூழ்நிலை காரணமாக பதற்றம் நிலவி வருவதால், வாக்கு எண்ணிக்கை நாளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் என்னையும், எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க போதுமான காவல் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், சினோரா அசோக்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் நிலைபேறாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
காவல்துறையின் இந்த விளக்கத்தை பதிவு செய்த நீதிபதி, மேலதிக உத்தரவு தேவையில்லை எனக் கருதி, மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலம், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b