Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று முதல்முறையாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்தார்.
உதகை அருகே லவ்டேல் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவையிலிருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக வந்த ஆளுநர், உதகையில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிகமாக தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து லவ்டேல் பகுதியில் நடைபெறும் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு உதகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி முடிந்ததும், ஆளுநர் மீண்டும் மக்கள் மாளிகைக்கு திரும்பி, அங்கிருந்து மாலை சுமார் 3 மணியளவில் சாலை மார்க்கமாக கோவை செல்கிறார். பின்னர் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இந்த வருகை, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கல்வி தொடர்பான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN