Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,30 ஏப்ரல் (ஹி.ச.)
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பதுக்கல், திருட்டு மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம், உண்மையான பயனாளர்களுக்கு சிலிண்டர் தாமதமின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், வரும் மே 1-ஆம் தேதி முதல் ஓடிபி (OTP) அடிப்படையிலான சிலிண்டர் விநியோக முறையை 100 சதவீதம் அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதன்படி, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 4 இலக்க ஓடிபி அனுப்பப்படும்.
சிலிண்டர் வீடு தேடி வரும் போது அந்த ஓடிபியை டெலிவரி பணியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் வழங்கும் ஓடிபி சரியாக பதிவுசெய்யப்பட்ட பிறகே சிலிண்டர் விநியோகம் நிறைவடைந்ததாக நிறுவனத்தின் கணினி அமைப்பில் பதிவு செய்யப்படும்.
ஓடிபி இல்லாமல் சிலிண்டர் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையால் போலி விநியோகம், சிலிண்டர் திருட்டு மற்றும் கள்ளச்சந்தை விற்பனை போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 94 சதவீத அளவில் இந்த ஓடிபி முறை நடைமுறையில் உள்ள நிலையில், மே மாதம் முதல் முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA