Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 30 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்பட முயன்ற சம்பவம் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளது. புதுமடம் கடற்கரை வழியாக பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த கண்காணிப்பின் போது, புதுமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த பைசூல் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கு சோதனை நடத்திய போலீசார், இலங்கைக்கு கடத்துவதற்காக பண்டல் பண்டலாக சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பூச்சி மருந்துகள், ஷாம்பு பாக்கெட்டுகள், சோப்பு பண்டல்கள், காபி தூள் உள்ளிட்டவை இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த கடத்தல் முயற்சியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள், எவ்வாறு இந்த பொருட்கள் கடத்தப்பட இருந்தது போன்ற விவரங்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN