குற்றால குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் கோரிக்கை
தென்காசி, 30 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றாலமும், அதில் துள்ளிக் குதித்து விளையாடும் குரங்குகளும் தான். வனத்தோடு ஒருங்கிணைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த குரங்குகள் தற்போது மக்களை நம்பியே வாழ வ
Tenkasi Forest


தென்காசி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றாலமும், அதில் துள்ளிக் குதித்து விளையாடும் குரங்குகளும் தான்.

வனத்தோடு ஒருங்கிணைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த குரங்குகள் தற்போது மக்களை நம்பியே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால் அந்த செயல் வேதனைக்குரிய செயலாகவே உள்ளது.

இதற்கு காரணம் நமது அறியாமை மட்டுமல்ல வாயில்லா ஜீவன் சாப்பிட்டு போகட்டுமே என நினைத்து பலர் குரங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், மனிதன் உண்ணும் உணவை சாப்பிடும் அந்த குரங்குகள் உணவை தேடி அலைந்து உண்ணும் பழக்கத்தை மறந்து பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குரங்குகளுக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சாப்பிட உணவு இல்லாமல் குரங்குகள் அட்டைப்பெட்டியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நமது ஜெயா ப்ளஸ் செய்தி சேனலில் செய்தி வெளியிட்டோம்.

இந்த நிலையில், தற்போது தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் எனவும், அவைகள் தன்னுடைய வன சூழலுக்கு ஏற்றால் போல் வாழ்ந்தால் தான் அதன் உடல் நலன்கள் நன்றாக இருக்கும் எனவும் அந்த விழிப்புணர்வு வீடியோவில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வன அலுவலர் உட்பட பல்வேறு துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என கோரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN