Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.அவர் கூறியதாவது:தேர்தல் பிரச்சாரத்திற்காக நரேந்திர மோடி கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வருகை தர உள்ளார்.
சாத்தூர் தொகுதியில் நாளை மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.
நாளை முதல் சாத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்வார்கள் என்றும் கூறினார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பு நிலவி வருகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
மாணிக்கம் தாகூர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம் இல்லாததே திருமாவளவன் போட்டியிலிருந்து விலக காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கை குறித்து கடுமையாக விமர்சித்த அவர், அது “ஹீரோ” அல்ல, “ஹெராயின்” தேர்தல் அறிக்கை எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்ததற்கு திராவிட முன்னேற்ற கழகம் காரணம் என்றும், சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு வரும் 23ஆம் தேதி மக்கள் தகுந்த பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இதேபோல், விஜய் கூட்டங்களுக்கு அதிக மக்கள் வருவது ஓட்டாக மாறாது என்றும், கூட்டத்திற்கும் ஓட்டுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும், தேர்தல் முடிவில் அது வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam