Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாளை (06.04.2026) திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று (04.04.2026) ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 55 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாகப் பெறப்பட்ட மனுக்களின் விபரப்படி, விளாத்திகுளம் தொகுதியில் 13 மனுக்களும், தூத்துக்குடி தொகுதியில் 12 மனுக்களும், திருச்செந்தூர் தொகுதியில் 11 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2 மனுக்களும், ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 9 மனுக்களும், கோவில்பட்டி தொகுதியில் 8 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், விளாத்திகுளம் தொகுதியில் இதுவரை மொத்தம் 18 மனுக்களும், தூத்துக்குடி தொகுதியில் 18 மனுக்களும், திருச்செந்தூர் தொகுதியில் 20 மனுக்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11 மனுக்களும், ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 14 மனுக்களும், கோவில்பட்டி தொகுதியில் 13 மனுக்களும் என மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 94 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று (05.04.2026) ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. நாளை (06.04.2026) திங்கட்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை பெறப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும், வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி காலை 11 மணியளவில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் கூர்ந்தாய்வு செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b