Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தொடர் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நெல்லையிலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 12632) நாளை (ஏப்ரல் 6) முதல் வரும் 21-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், ராமேசுவரத்திலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 16752) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஐதராபாத்திலிருந்து வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12760) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12661), வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து இரவு 8:05 மணிக்குப் புறப்படும்.
சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16751), வரும் 7-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து இரவு 9:05 மணிக்குப் புறப்படும்.
மேலும், தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12759) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6:20 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b