Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
ஆனால், கடலில் நீரோட்ட மாற்றம் அல்லது பிற காரணங்களால் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடனேயே கரை திரும்பினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அதிகாலையிலேயே திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காகப் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர்.
வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. சீலா ஒரு கிலோ ரூ.1,000, விளைமீன், ஊழி, பாறை ஒரு கிலோ ரூ.400 முதல் 500 வரை, நண்டு ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை, கேரை மற்றும் சூரை ஒரு கிலோ ரூ.250 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ.2,000 வரை விற்பனையானது.
விலை அதிகமாக இருந்தபோதிலும், தங்களுக்குப் பிடித்தமான மீன்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் ஒரு சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.
மீன் வரத்து குறைந்ததால் தங்களுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b