Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்களுக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
வானதி சீனிவாசன் மற்றும் எல்.முருகனுக்கு பாஜகவினர் மாலை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பளித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,
திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு குறு தொழில்கள் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல் அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சிறந்த ஆட்சியை தரும் என தெரிவித்தார்.
மேலும் பேசியவர் வரும் நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
அண்ணாமலை போட்டியிடாத காரணத்தை அவரே தெரிவித்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெளிவு படுத்தி உள்ளதாகவும், வரும் நாட்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை அவர்கள் சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என குறிப்பிட்டார்.
வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி முடிவு ஆகியவை கட்சியின் உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என தெரிவித்தார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு திமுக அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் விரும்பும் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தான் கொடுக்கும் எனவும், கட்சி சொல்வதை கேட்டு அனைவரும் உழைத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / Durai.J