Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று தொடங்குகிறது.
இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகளைத் தொய்வின்றி முடிக்க, தகுதியுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பணியில் ஈடுப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது.
தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே திருத்த அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விடைத்தாள் திருத்தப்பணிகள் முடிந்து, மே 20ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b