கோவை தெற்கு தொகுதியை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் - செந்தில் பாலாஜி
கோவை, 06 ஏப்ரல் (ஹி.ச.) கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித
S


கோவை, 06 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே எங்கள் இலக்கு. 10 தொகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டும். அதில், கோவை தெற்குத் தொகுதியும் வளர்ச்சி பெற வேண்டும் என்று பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

கோவையில் செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், மேற்குப்புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம் உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ளோம். அதிமுகவினர் என்ன திட்டங்களைச் செய்தார்கள் என்று கேளுங்கள்.

தேர்தல் களத்திற்கு எங்களுக்கு கரூரில் இருந்தோ, வேலூரில் இருந்தோ ஆட்களை இறக்கி வேலை செய்யத் தேவையில்லை. கோவையில் உள்ள எங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்ப்படை சிப்பாய்களைப் போன்றவர்கள்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் வெளியூரில் இருந்து வந்தவர் தானே. அவர் 25 ஆண்டுகளுக்கு முன் வந்தார். நான் 5 ஆண்டுகளுக்கு முன் வந்தேன். அவரை விட கோவையையும், தெற்குத் தொகுதியையும் நன்கு அறிந்தவன் நான். பல பணிகளில் பங்கெடுத்துள்ளேன். அதனால் அவர் சொல்லும் இந்த கருத்து மக்களிடம் எடுபடாது.

நான் நடந்து சென்று வாக்கு சேகரிக்கும்போது ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்கள் என்னுடன் பேசி, ஆரத்தி எடுத்து அனுப்புகின்றனர். வார்டு வாரியாக நடந்து சென்றே பிரச்சாரம் செய்யப் போகிறோம்.

எனது பெயரிலேயே 10 பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, 100 பேர் வந்தாலும் சரி பார்த்துக்கொள்ளலாம். மக்கள் தீர்மானித்து, நன்கு அறிந்து வாக்கு செலுத்தும் காலம் இது.

20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்ட பம்ப் செட் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளும், கோவையில் உள்ள பம்ப் செட் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலேயே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் 60,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஓட்டு எண்ணிக்கை நாளில் நான் மொத்தமாக 60,000 ஓட்டுகள் வாங்குவேன் என்று தான் சொன்னேன் என்று கூறவும் வாய்ப்புள்ளது.

அதிமுக வேட்பாளர் வடக்கில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது அவரை ஏன் தெற்கில் நிற்க வைத்துள்ளார்கள்? அவரைத் தோற்கடிக்கும் முடிவில்தான் நிறுத்தப்பட்டாரா? தெற்குத் தொகுதியில் போட்டியிடும் விருப்பமனுவை சமீபத்தில்தான் நான் வழங்கினேன். இதற்கு முன் தெற்குத் தொகுதியில் நான் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.

நான் இங்கு நின்றால்தான் திமுக வெற்றி பெறும் என்பதெல்லாம் இல்லை. இந்த செந்தில் பாலாஜி இல்லை என்றால் 100 செந்தில் பாலாஜிகள் வருவார்கள் இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam