Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 06 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் ஒவ்வொரு நாளும் குதிரை,கேடயம்,ஷேசம்,மயில், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
அதன் ஒரு பகுதியாக இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விடிய , விடிய நடைபெற்ற இந்த விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி சென்னை, மதுரை, கோவை, தேனி, பாண்டிச்சேரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN