Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020 ஜூன் 19 ல் காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு கொலை வழக்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர்
சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்களான முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக கடந்த 23 ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வாசித்தார்.
குற்றவாளிகளான 9 பேருக்கும் தண்டனை அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை ஐந்தரை ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அறிவிக்கவுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும், ஜெயராஜ் குடும்பத்தினர் தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் முறையிட்டதும், குற்றவாளிகளில் தரப்பில் முறையிட்டபோது திட்டமிட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை எனவே குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN