Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 06 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் ரயில் நிலையம் சுற்றுவட்டாரத்தில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆகாஷ் (25) மற்றும் வினோத் (28) ஆகிய இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் கடலூரில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், பயணத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கியதாகவும் தெரிவித்தனர். அவர்களின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்ட போலீசார், மேலும் சோதனை மேற்கொண்டபோது அவர்களிடம் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, இருவரிடமிருந்து 15 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் என்ற ஆபத்தான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மேலும் தகவல்கள் பெற விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது, அதை எங்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர், இதற்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா என்பன குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN