Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி ச.)
வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் நடிகர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறை வழங்கிய அனுமதி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக முன்பதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது தேர்தல் அலுவலர் வழங்கிய அனுமதி கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, தி.நகர் பகுதியில் 2 முதல் 3 மணி நேரம் வரை பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வில்லிவாக்கம் பகுதியில் காலை 11 மணி முதல் 1 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல்துறை 12 மணி முதல் 1 மணி வரை மட்டும் அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தி.நகர் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை பிரச்சாரம் நடத்த விஜய் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்கூட்டியே வேறு நேரத்தில் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், வழங்கப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்தாமல், அனுமதி வழங்கப்படவில்லை என கூறி தவெக நிர்வாகிகள் பிரச்சாரத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
தி.நகர் நிகழ்ச்சி நடைபெறாததால், அதனுடன் இணைக்கப்பட்ட வில்லிவாக்கம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ