Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச)
விமானங்களுக்கான எரிபொருள் விலையை 25 சதவிகிதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், விமான டிக்கெட்டில் உள்ள எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா உயர்த்தியிருக்கிறது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, உலகம் முழுவதும் விமானங்களுக்கான எரிபொருள்கள் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமானங்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்களுக்கான விலையில் எரிபொருள் கூடுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இது பெரும்பலான பாதைகளில் நாளை
(ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தக் கட்டணமும் மாற்றம் செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும், ஒரே மாதிரியான கட்டண உயர்வு என்று இல்லாமல், தொலைதூரத்துக்கு ஏற்ப கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கட்டண உயர்வானது 299 அமெரிக்க டாலர்கள் முதல் 899 டாலர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் பொருந்தும்.
விமான எரிபொருல் விலை உயர்வால், விமான சேவை நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பினை, இந்த எரிபொருள் கூடுதல் கட்டணம் நிவர்த்தி செய்துவிடாது என்றும், நஷ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும் ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அதேவேளையில், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான தேதி போன்றவற்றை மாற்றும்போது கட்டண உயர்வை செலுத்த வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச விமானங்களில் சார்க் நாடுகளுக்கான டிக்கெட் விலையில் ரூ.2,200ம், ஐரோப்பா, லண்டன் போன்ற நாடுகளுக்கான டிக்கெட் விலையில் ரூ.20 ஆயிரம் வரையிலும், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான டிக்கெட் கட்ணத்தில் ரூ.26 ஆயிரமும் கூடுதலாக செலுத்த நேரிடலாம் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b