30 ஆண்டுக்கு குடிநீர் பிரச்சனையே வராத அளவிற்கு காவிரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன் - முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
ஒட்டன்சத்திரம் 07 ஏப்ரல்(ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பி
_


ஒட்டன்சத்திரம் 07 ஏப்ரல்(ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிராமம் கிராமமாக சென்று திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது அமைச்சர் அர.சக்கரபாணி பேசிய போது கூறியதாவது:

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் கோடிக்கணக்கான நிதியில் பல்வேறு திமுக அரசின் சார்பில் நலத்திட்டப் பணிகளை தொகுதிக்கு செய்துள்ளேன்.

தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காரணம் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம், நான் முதல்வன், அன்புக் கரங்கள், காலை சிற்றுண்டி போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதால் தமிழக மக்கள் திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தினால் வருகின்ற 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினையே ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்காது என்ற அளவிற்கு இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியுள்ளேன்.

அனைத்து தரப்பு பொதுமக்களின் ஆதரவுடன் நான் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

என்னை வெற்றிபெற வைத்தால் தொகுதி மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றினேனோ, அதுபோல தொடர்ந்து தொகுதியில் களப் பணியாற்றி என்றும் மக்களின் அன்புரியவனாக இருப்பேன். எதிர்கட்சிகள் பொய்யான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பினாலும், அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளிலும் திமுகவின் கூட்டணி வாக்குறுதிகளைத்தான் நம்புவார்கள். காரணம் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சொல்லக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி திமுக என்பதை உணர்ந்துள்ளார்கள்.

மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மகளிருக்காக அவர் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்துவிடும், இது உறுதி இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA