Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி துறையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நடைபெறும் போரின் காரணமாக மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 50 முழு எந்திர தொழிற்சாலைகள், 320 பகுதி எந்திர தொழிற்சாலைகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட பேக்கிங் ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தீப்பெட்டி தயாரிப்பிற்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஈரானில் இருந்து வரக்கூடிய மெழுகு, பாலித்தீன் போன்ற பொருட்களின் இறக்குமதி போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்பு ரூ.80க்கு கிடைத்த மெழுகு தற்போது ரூ.150 வரை உயர்ந்துள்ளது. மேலும், பேக்கிங் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலை காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து, தொழிற்சாலைகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வருகிற 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam