Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 07 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியத்தில் புகழ்பெற்ற மதுரை காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது களைகட்டியுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 32 அடி உயரம் கொண்ட இரண்டு பிரம்மாண்ட மரத்தேர்களில் மதுரை காளியம்மனும், ஓலைப்படாரி அம்மனும் எழுந்தருளினர்.
அலங்கரிக்கப்பட்ட இந்த தேர்களைப் பக்தர்கள் தங்கள் தலைகளிலும், தோள்களிலும் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இரண்டு திருத்தேர்களும் வாணபட்டரை மைதானத்தை வந்தடைந்தன.
இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் விண்ணைப் பிளக்கும் வகையில் பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
வானில் வர்ண ஜாலங்களை நிகழ்த்திய வானவேடிக்கைகளும், அதிர வைக்கும் வேட்டுச் சத்தங்களும் பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN