Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக புதுச்சேரி முழுவதும் 30 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்து 99 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் சமயத்தில் அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தபால் வாக்கு செலுத்த மேலும் 5 அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் தபால் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்றது.
சேவை வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் வாக்குச்சீட்டுகள் அனுப்பி பெறப்பட்டிருந்தன.
அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு பதிவு செய்யும் பணியும் முன்னதாகவே நிறைவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் பதிவான தபால் வாக்குகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் மூத்த குடிமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 12,591 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் சட்டம்னறத் தேர்தலில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b