Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
வடசென்னை பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து குறைந்ததும், உற்பத்தி தொடர்பான சிக்கல்களும் ஏற்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்பத்தூர் பால் பண்ணையில் பால் ஏற்றுதல் தாமதமாகி, பல பகுதிகளுக்கு பால் நேரத்திற்கு கிடைக்கவில்லை.
பொதுவாக அதிகாலை நேரத்தில் கிடைக்க வேண்டிய பால், காலை நேரம் வரை தாமதமாக வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதனால் அண்ணா நகர், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஆவின் பால் கிடைக்காததால் பலரும் தனியார் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam