Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஏப்ரல் (ஹி.ச.)
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இடுக்கியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் கார்கே பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில்,
கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். நன்கு படித்தவர்கள். மோடிஜியும், பினராயி விஜயனும் குஜராத் அல்லது மற்ற இடங்களிலுள்ள படிப்பறிவில்லாத மக்களை முட்டாளாக்கலாம். ஆனால், கேரள மக்களை முட்டாளாக்க முடியாது என்று பேசினார்.
கார்கேவின் இந்தப் பேச்சு, குஜராத்தில் பரவலான எதிர்ப்பைப் பெற்றதுடன், பல்வேறு தரப்பினர் கண்டனங்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தன்னுடைய கருத்துகளுக்கு கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கார்கே இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கேரளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் உரையில் நான் கூறிய சில கருத்துகள் வேண்டுமென்றே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், அதற்காக நான் எனது மனமுவந்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அவர்கள் மீது எப்போதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எப்போதும் வைத்திருப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b