Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 08 ஏப்ரல் (ஹி.ச)
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
இன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விஜய் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் இன்று காலை வந்தார்.
அங்கு அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து விஜய் அங்கிருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டார்.
நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் பாளை கே.டி.சி. நகர் பாலம் அருகே உள்ள மைதானத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்த விஜய்க்கு நிர்வாகிகள் விசில் சத்தம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கு அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் காரில் நின்றபடி நெல்லை-மதுரை சாலையில் தாழையூத்து நோக்கி புறப்பட்டார். அங்கு நிர்வாகிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி வழியாக மீண்டும் கே.டி.சி. நகர் வந்தடைந்த விஜய், அங்கிருந்து தூத்துக்குடி புறப்பட்டார். திறந்த வேனில் ரோடு ஷோவாக வந்த விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து தவெக தொண்டர்கள் பலரும் பைக்குகளில் விதியை மீறி அணிவகுத்து வந்தனர். விஜய் ரோடு ஷோவால் நெல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட நெல்லையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் கூடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கும் உள்ளாகினர்.
Hindusthan Samachar / vidya.b