திருநெல்வேலி – தூத்துக்குடியில் இன்று தேர்தல் பிரசாரம்- விஜய் ரோடு ஷோக்கு அனுமதி
திருநெல்வேலி, 08 ஏப்ரல் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தவெக தலைமை
TVK Vijay


திருநெல்வேலி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தவெக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி – தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே நண்பகல் 1.00 மணி முதல் பிரசாரம் தொடங்குகிறது.

பின்னர் தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தொடர்ந்து, மாலை 3.00 மணி முதல் தூத்துக்குடி நகரில் மைல் பகுதியிலிருந்து VVD சிக்னல் வரை விஜய் சாலை நிகழ்ச்சி (ரோடு ஷோ) நடத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பிரசார நிகழ்வுகளுக்காக குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு காரணங்களால் பிரசார வாகனத்தை எந்தவித வாகனங்களிலும் யாரும் பின்தொடரக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வராமல் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகள் மூலம் நிகழ்வுகளைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ