Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்தப் பிரசாரப் பயணத்தின் போது, பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 15 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகள் 11 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நேற்று காலை தூத்துக்குடி வந்தடைந்த விஜய் அங்கிருந்து பிரசார வேன் மூலம் நெல்லை நோக்கிப் புறப்பட்டார்.
விஜய்யின் பிரசார வேனைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். போலீசார் பல இடங்களில் தடுத்தும் மீறிச் சென்றபோது பல விபத்துகள் நேரிட்டன.
பிரசார வேனை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 7 தொண்டர்கள் காயமடைந்தனர்.
பொட்டல் விலக்கு முதல் தாழையூத்து வரை சென்ற வழியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் லேசான காயமடைந்தனர்.
விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் சாலையைக் கடந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துரை என்பவர் மீது அரசு பேருந்து மோதியது. பேருந்து சக்கரங்களுக்குள் சிக்கிய அவரை மீட்ட போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா, ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் தனது சொந்தக் காரிலேயே அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கே.டி.சி. நகரில் தொண்டர்களின் வாகனங்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.
ஒரே நாளில் விஜய்யின் பிரசாரப் பயணத்தில் 5 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது மற்றும் விபத்துகளுக்குக் காரணமாக இருந்தது தொடர்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான வாகனங்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதே இந்த விபத்துகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b