புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் - தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்ட மக்களுடன் மோதல்
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு துவங்கி உள்ள நிலையில், பாகூர் சட்டமன்ற தொகுதியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின்
டோக்கன்


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு துவங்கி உள்ள நிலையில், பாகூர் சட்டமன்ற தொகுதியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தியாகராஜன் என்பவர் வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு அதிகாலையில் வீடு வீடாக சென்று அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரொக்கப் பரிசு, மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாக்குப்பதிவுக்கு பின்பு வழங்குவதாக உறுதி அளித்து இந்த டோக்கன் விநியோகம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் வாக்காளரை கவரும் டோக்கன் விநியோகம் குறித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தற்போதைய வேட்பாளர் செந்தில்குமார் அவர்களின் ஆதரவாளர்கள் டோக்கன் விநியோகத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து அவர்களை விரட்டிப் பிடித்தபோது, டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்ட ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் சாலையில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P