Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)
பாமக உள்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26 ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நேற்று முறையிடப்பட்டது. அப்போது மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், ராமதாஸ் தரப்பில் இன்று மீண்டும் 3 வது முறையாக முறையீடு செய்யப்பட்டது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு எண்ணிடப்பட்டுவிட்டதால், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் வழக்கமான பட்டியலின் படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டிலிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P