Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, நீதி கோரி தலைமை காவலர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த கோதண்டபாணி, சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அவரது மகளுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்ட நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோதண்டபாணி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முன்பே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது மகளுக்கு நீதி கோரி, காவலர் சீருடையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த கோதண்டபாணி, திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ