Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 7,599 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 6ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 7,599 மனுக்களில் 5,020 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2,470 மனுக்கள், சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. 38 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
வேட்புமனு பரிசீலனை முடிந்த நிலையில் இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 120 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இறுதியாக எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற தகவலை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
அப்போதே, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.
Hindusthan Samachar / vidya.b