பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தின் முகத்தையே மாற்றும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
கோவை, 09 ஏப்ரல் (ஹி.ச.) மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர், என
G


கோவை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அப்போது அவர் தெரிவித்ததாவது,

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் விஜய் மிகவும் பிரபலமான நடிகராகத் திகழ்வதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது அவரோடு பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை விஜய் இடங்களைக் கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம் என்று குறிப்பிட்டார்.

விஜய் அதிக வாக்குகளைப் பெறுவார் என்பதால் அவர் திமுகவுக்குப் பெரிய சவாலாக இருப்பார் என்றும், தங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம் என்றும் அத்வாலே விளக்கமளித்தார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி குறிப்பிட்ட அவர், இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் இந்து வாரிசுரிமை சட்டக் கனவை நனவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றார்.

வரும் காலங்களில் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக உயரக்கூடும் என்றும், அதில் பெண்கள் 273 இடங்களில் அமர்ந்து சாதனை படைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இடஒதுக்கீடு 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் தலித்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அநீதிகளைத் தடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று கூறிய அத்வாலே, கூட்டணியில் 18 இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி 'நட்பு ரீதியான' போட்டியில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் 10-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,முத்ரா யோஜனா மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

கோவை பயணத்தைத் தொடர்ந்து மதுரை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அனைவருடனும் இணைந்து அனைவரின் வளர்ச்சி

(சப்கா சாத் சப்கா விகாஸ்) என்ற முழக்கம் தமிழக மக்களிடம் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J