Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுச்சேரி இந்திராநகர் திலாசுப்பேட்டை பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவர் வாக்களிக்க சென்ற போது புகைப்பட நிருபர்களை போலீஸார் உள்ளே அனுமதிக்காதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதிவரை அனுமதிக்காத சூழலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்க முற்பட்டனர். ஆனால், ‘இங்கு வேண்டாம்’ என்பதுபோல் சைகை செய்துவிட்டு ரங்கசாமி புறப்பட்டார்.
பின்னர் நவசக்தி மாரியம்மன் கோயிலில் அவர் வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
தேர்தலுக்கு முதல் நாள் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதேபோல் இம்முறையும் சாமி கும்பிட்டு வந்துதான் வாக்களித்துள்ளேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b