Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 01 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
கிருஷ்ணா மாவட்டம் பமிடிமுக்களாவில் நடைபெற்ற “ஏழைகளின் சேவையில்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
மாநிலம் முழுவதும் 15 முக்கிய இடங்களில் தொழிலாளர்களுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட “லேபர் அட்கள்” அமைக்கப்படும் என அறிவித்தார்.
இவை ஓய்வு மையங்களாக மட்டுமின்றி, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களாகவும் செயல்படும் என தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள 88 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் சிறந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு “ஸ்ரம சக்தி” விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் தற்போது 62.47 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 22 மாதங்களில் மட்டும் ரூ.63 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஓய்வூதியத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ரூ.33 ஆயிரம் கோடி ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் மாநிலம் முழுவதும் 263 அண்ணா கேன்டீன்கள் மூலம் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுவதாகவும், முந்தைய அரசில் நிறுத்தப்பட்ட தொழிலாளர் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டிடத் தொழிலாளர்களுக்கு திருமண உதவியாக ரூ.25 ஆயிரம், மகப்பேறு உதவியாக ரூ.20 ஆயிரம், இயல்பான மரணத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
அதேபோல் அச்சுதாபுரம், குண்டூர், ஸ்ரீசிட்டி, கர்னூல் மற்றும் அமராவதியில் புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
என் நம்பிக்கை மக்கள்மீதே உள்ளது. எம்.எல்.ஏ.க்களை விட மக்களுக்கே நான் முன்னுரிமை அளிப்பேன்.
அவர்களின் செயல்பாடுகளை மக்கள்முன்னிலையில் ஆய்வு செய்வேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA