Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல்
27-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழா முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு கள்ளழகர் நேற்று வந்தடைந்தார்.
அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டார்.
இன்று (மே 1) அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.
எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வரவேற்க, அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
`கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷம் முழங்க பக்திப் பெருக்குடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கள்ளழகர் வைபவம் குறித்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு, சித்திரை பௌர்ணமியன்று மதுரையில் வைகை ஆற்றில், அழகர் இறங்கும் வைபவம். பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னதவிழா.
தவளையாக சாபம் பெற்ற மண்டூகமகரிஷிக்கு விமோசனம் கொடுக்க சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டுத் தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள, பக்தர்கள் காவல் தெய்வமான கருப்பசாமி வேடத்தில் இசைக்கேற்ப ஆடுவதும், தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும் காணக் கண்கொள்ளாக் காட்சி.
திருக்கண் எழுந்தருளலும், தெருதோறும் அன்னதானமும் மனதையும் வயிறையும் நிறைவு செய்யும். இவ்விழாவைக் கொண்டாடும் மதுரை மக்களை வாழ்த்துவதோடு, நல்லமழை பெய்து நானிலம் சிறக்க நானும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b