Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 01 மே (ஹி.ச.)
கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று முதல் புதிய போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் உச்சத்தில் இருக்கும் நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இதனால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதனை தவிர்க்கும் நோக்கில்,
மேட்டுப்பாளையம் இலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி சந்திப்பு – சேலாஸ் – கெந்தளா – கேத்திப்பாலடா – லவ்டேல் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் இருந்து கூடலூர் மற்றும் தெப்பக்காடு செல்லும் வாகனங்கள் லவ்டேல் ரயில் நிலையம் – மஞ்சனக்கொரை – காந்தல் முக்கோணம் வழியாக மாற்றி விடப்படுகின்றன.
குன்னூர் இலிருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் ஆவின் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சுற்று பேருந்துகள் மூலம் சுற்றுலா தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அதேபோல், கோத்தகிரி இலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் மேக்சி கேப் வாகனங்கள் அரசு கலைக்கல்லூரி தற்காலிக நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சுற்று பேருந்துகள் மூலம் அனுப்பப்படுகின்றன.
மேலும், பால், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து கனரக வாகனங்களுக்கும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam