Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 மே (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம் மேற்கொண்டால் ஆண்டு முழுவதும் உள்ள 12 பௌர்ணமி கிரிவலம் மேற்கண்ட பலன் கிடைக்கும் என்பதால் அதுமட்டுமின்றி சித்ரா பௌர்ணமியின் போது பக்தர்களுடன் சித்தர்களும் இணைந்து கிரிவலம் வருவார்கள் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதலே 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டு வருகின்றனர்.
சித்ரா பௌர்ணமி நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.57 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இன்று அதிகாலை முதலே திருவண்ணாமலைக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னை மதுரை திருச்சி கோவை சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் திருவண்ணாமலைக்கு வருகை தந்து இரண்டாவது நாளாக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நீந்தியபடி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அதே போன்று வெளிமாநில பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை பகுதிகளில் 90 இடங்களில் கார் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் எந்தவிதமான சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் 4250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 5669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN