மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்த பயிற்சிகள் மே 11 ஆம் தேதி முதல் தொடக்கம் - மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் தகவல்
சென்னை, 01 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மே மாதம் தொடங்கவுள்ளன.ஜூலையில் வீடு வாரியான தகவல் சேகரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்த பயிற்சிகள் மே 11 ஆம் தேதி முதல்  தொடக்கம்  - மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் தகவல்


சென்னை, 01 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மே மாதம் தொடங்கவுள்ளன.ஜூலையில் வீடு வாரியான தகவல் சேகரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதத்தில் நடைபெறும் என மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறுகையில்,

2026 பிப்ரவரியில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆரம்ப ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. எனினும், சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பயிற்சி மீண்டும் தொடங்கும் என தெரிவித்தனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம். சுந்தரேஷ் பாபு கூறுகையில்,

திட்டமிடப்பட்ட முறையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மே 11-ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இதில் சுமார் 110 தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பங்கேற்பர். மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடி ஆய்வுக் கூட்டம் மே 15 அல்லது 22-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை முழுமையாக டிஜிட்டல் முறையில் வீடு பட்டியலிடும் பணி நடைபெறவுள்ளது. கட்டுமானப் பொருட்கள், அடிப்படை வசதிகள், சொத்துகள் உள்ளிட்ட 33 வகையான வீட்டு தகவல்கள் சேகரிக்கப்படும்.

இந்தப் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிக்கான 30 நாள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு முன்னதாக, 15 நாட்களுக்கு சுய-கணக்கெடுப்பு முறைக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

சுய-கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31 வரையும், அதைத் தொடர்ந்து வீடு பட்டியலிடும் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30 வரையும் நடைபெறும்.

கணக்கெடுப்பின்போது, குடியிருப்போர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உரிமை உள்ளிட்ட வீடுகள் குறித்த விரிவான தகவல்களை கணக்கெடுப்பாளர்கள் சேகரிப்பர்.

மேலும், உணவு நுகர்வு முறை உள்ளிட்ட சமூக-பொருளாதார குறியீடுகள் தொடர்பான கேள்விகளும் கேள்வித்தாளில் இடம்பெறும்.

இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடைபெறும். அப்போது மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார, இடம்பெயர்வு மற்றும் கருவுறுதல் தொடர்பான விரிவான தகவல்கள் சேகரிக்கப்படும்.

இந்த கட்டத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் முறையிலான இந்த அணுகுமுறை துல்லியம், செயல்திறன் மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பை மேம்படுத்தும் என்றும், மாநிலத்தில் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b