Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 10 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக இருந்து வழிபாடுகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கோவிலில் பூஜை செய்வதற்கு தங்களுக்கும் உரிமை உள்ளதாக முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட்டிருந்தனர்.
இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் கோவிலில் பூஜை நடைபெற்று கொண்டிருந்த போது, பக்தர்கள் முன்னிலையிலேயே பூசாரி முத்துக்குமார் மற்றும் அவரது பங்காளிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
அப்போது முத்துக்குமார் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்னதிக்குள் நடந்த இந்த மோதலை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam