காங்கிரஸ் திமுகவின் முதுகில் குத்திவிட்டது - பிரதமர் மோடி கடும் விமர்சனம்
பெங்களூரு, 10 மே (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி, வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா வருகை தந்துள்ளார். இன்று நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கு கூடி இருந்த பாஜக தொண்டர்கள் மற
Modi launches scathing criticism


பெங்களூரு, 10 மே (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி, வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா வருகை தந்துள்ளார்.

இன்று நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கு கூடி இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

போலி வாக்குறுதிகள் காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. தற்போது அது, பிராந்திய கட்சிகளின் துணையுடன் பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணி அரசியல் சக்தியாக உள்ளது.

எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை.

ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி எழத் தொடங்கிவிடுகிறது.

இதற்குக் காரணம், துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். அவர்கள் பொய்யர்கள், அவர்களின் வாக்குறுதிகளும் போலியானவை.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் புத்தகத்தில் நிர்வாகம் என்ற அத்தியாயம் அறவே இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது.

திமுகவுடனான இந்த கூட்டணிதான் நெருக்கடியான தருணங்கள் பலவற்றில் இருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்திருக்கிறது.

2014-ம் ஆண்டுக்கு முன் அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, திமுகவின் துணையால் மட்டுமே நிலைத்திருந்தது.

25-30 ஆண்டுகளாக தங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்த திமுகவை காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக ஒவ்வொரு கணமும் உழைத்த அந்த திமுகவை அதிகார ஆட்டம் வேறு திசைக்கு திரும்பிய உடனேயே அதிகார வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி தனது பதவி ஆசை காரணமாக கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது.

நீண்டகாலக் கூட்டணி கட்சியான திமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளது.

அரசியல் சூழல்கள் மாறும்போதெல்லாம் அக்கட்சி தனது சொந்த கூட்டணி கட்சிகளுக்கே எதிராக திரும்பிவிடுகிறது.

ஒட்டுண்ணி போன்ற காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள, தான் சவாரி செய்ய மற்றொரு கட்சியின் துணை தேவைப்படுகிறது.

ஒரு காலத்தில் 400க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இப்போது, கூட்டணிகளை அமைத்த பிறகும் கூட 100 தொகுதிகள் என்ற இலக்கை கடக்க முடியாமல் திணறுகிறது.

அதேநேரத்தில் பாஜக தனது செல்வாக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னால், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள்.

இன்று 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கேரளாவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து தற்போது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டி இருக்கிறோம்.

கேரளாவில் பெரும்பான்மையைக் கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பாஜக தனது இருப்பை படிப்படியாக வலுப்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b